மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென கழக துணைப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழகத்தில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டு வருகிறார். அதன்படி, சேலம் மத்தியம், மேற்கு, வடக்கு, தெற்கு ஆகிய தொகுதிகளில், மக்கள் சந்திப்பு புரட்சிப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
சூரமங்கலம் உழவர் சந்தை பகுதியில் திரு. டிடிவி தினகரனுக்கு அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பட்டாசு வெடித்தும், பெண்கள் ஆரத்தி எடுத்தும் வரவேற்பு அளித்தனர்.
அங்கு திரண்டிருந்த மக்களிடையே எழுச்சியுரையாற்றிய திரு.டிடிவி தினகரன், தமிழர்கள் வாழ்வு மலர, துரோக கட்சிகளுக்கு முடிவுகட்ட வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதனைத்தொடர்ந்து, ஒளவையார் மார்க்கெட் பகுதிக்கு சென்ற திரு.டிடிவி தினகரனை கழகத்தினர், பொதுமக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பின்னர், வின்சென்ட் கிருபா மருத்துவமனை பகுதியில் திரண்ட பொதுமக்களிடையே உரையாற்றிய திரு.டிடிவி தினகரன், மக்கள் விரும்பும் வகையில் தமிழகத்தில் மக்களாட்சியை ஏற்படுத்த அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கோரிமேடு, கன்னங்குறிச்சி உள்ளிட்ட இடங்களில் எழுச்சியுரையாற்ற வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அம்மாபேட்டை சந்திப்புக்குச் செல்லும் வழியில், சேலம் மத்திய மாவட்ட இளைஞர் அணிச் செயலாளர் திரு.பூ.ஜெகதீஸ்வரன் - த.வைஷ்ணவி திருமண வரவேற்பு பங்கேற்று மணமக்களை திரு.டிடிவி தினகரன் வாழ்த்தினார். அப்போது, திரு.டிடிவி தினகரனுக்கு பட்டாசு வெடித்து, மேளதாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து, அம்மாபேட்டை காமராஜர் வளைவில் திரண்டிருந்த பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றிய திரு.டிடிவி தினகரன், மக்கள் விரும்புகின்ற திட்டங்களைச் செயல்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரவும் கழகத்தை ஆதரிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
கிச்சிப்பாளையம் பகுதிக்கு வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்கு, மேளதாளங்கள் முழங்க மலர்தூவி எழுச்சிமிகு வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய திரு.டிடிவி தினகரன், தமிழகம் அமைதிப்பூங்காவாக விளங்க அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தை ஆதரிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து செவ்வாய்பேட்டை பகுதியில் திரு.டிடிவி தினகரனுக்கு ஏராளமான பெண்கள், இளைஞர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த பொதுமக்களிடைய பேசிய திரு.டிடிவி தினகரன், மாண்புமிகு அம்மா எதிர்த்த திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி, மக்கள்விரோத ஆட்சியை எடப்பாடி பழனிசாமி நடத்திக்கொண்டிருப்பதாக குற்றம் சாட்டினார்.
பின்னர் தாதகாப்பட்டி செல்லும் வழியில், லைன்மேடு பகுதிக்கு வருகை தந்த திரு.டிடிவி தினகரனுக்கு, அப்பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள், சிலம்பம் சுற்றி எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர். அங்கு கூடியிருந்த பெண்களிடம் திரு.டிடிவி தினகரன், குறைகளை கேட்டறிந்தார்.
தாதகாப்பட்டியில் திரு.டிடிவி தினகரனுக்கு செண்டை மேளம் முழங்க, பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே எழுச்சியுரையாற்றிய அவர், மாண்புமிகு அம்மாவின் நினைவிடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வழக்கு தொடர்ந்தவர்களுடன் கூட்டணி அமைத்துள்ளவர்களை தேர்தலில் தோற்கடிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
இதைத்தொடர்ந்து நெத்திமேடு, ஆஞ்சநேயர் கோயில் பகுதியில், மத்திய மாவட்டக்கழகம் சார்பில் திரு.டிடிவி தினகரனுக்கு தலைப்பாகை அணிவிக்கப்பட்டு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடியிருந்த மக்களிடையே பேசிய அவர், தமிழக மக்கள் விரும்பும் மாற்றத்தைக் கொண்டு வர அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.