நாடாளுமன்ற மக்களைவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கு, கழக நிர்வாகிகளும், தொண்டர்களும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெறச் செய்யும் வகையில் தீவிர களப்பணியாற்றப் போவதாக சூளுரைத்துள்ளனர்.
பொள்ளாச்சி நாடளுமன்ற தொகுதி கழக வேட்பாளர் திரு. எம்.எஸ்.கே முத்துக்குமார், மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொடக்குப்பட்டி, தளி, செல்லப்பம்பாளையம் உட்பட 30க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு வருகை தந்தார். பெண்கள் ஆராத்தி எடுத்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். திருப்பூர் புறநகர் மாவட்ட கழக செயலாளர் திரு. சி.சண்முகவேலு, கழக வேட்பாளர் எம்.எஸ்.கே முத்துக்குமாரை, கழக நிர்வாகிகளுக்கு அறிமுகம் செய்து வைத்தார். கழக அமைப்பு செயலாளர் உடுமலை திரு. கே.ஜி.சண்முகம் உட்பட கழக நிர்வாகிகள் திரளாக இதில் பங்கேற்றனர்.
நாகப்பட்டிணம் நாடாளுமன்ற கழக வேட்பாளர் செல்வி செங்கொடி வெற்றிபெற வாழ்த்தி, திருவாரூர் மாவட்டக் கழகச் செயலாளர் திரு. எஸ்.காமராஜ் பொன்னாடை அணிவித்தார். இதனைத்தொடர்ந்து கழக நிர்வாகிகள் பலரும் பொன்னாடை அணிவித்து கழக வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செல்வி செங்கொடி, நாகை நாடாளுமன்றத் தொகுதியை அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் கைப்பற்றும் என உறுதிபடத் தெரிவித்தார்.
திருவள்ளூர் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளராக, கழக மாணவரணி செயலாளர் திரு. பொன். ராஜா அறிவிக்கப்பட்ட நிலையில், கழகத்தின் கூட்டணியில் உள்ள எஸ்டிபிஐ கட்சி திருவள்ளுர் மாவட்டத் தலைவர் திரு. புஷாரி மற்றும் சையத் அஹ்மத் தலைமையில் அறிமுக கூட்டம் பொன்னேரியில் நடைபெற்றது. திரு. பொன். ராஜாவை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி வைப்பது என அப்போது சூளுரைக்கப்பட்டது.
காஞ்சிபுரம் தொகுதி நாடாளுமன்ற வேட்பாளர் திரு. முட்டுக்காடு முனுசாமிக்கு, மாமல்லபுரம், திருப்போரூர் பகுதியில் உள்ள வியாபாரிகள், அரசு ஊழியர்கள், பெண்கள் அமைப்பினர், சமூக ஆர்வலர்கள், மாற்றுத்திறனாளி இயக்கத்தினர் மற்றும் சிறுபான்மையினர் உள்ளிட்ட பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளனர்.
பெரம்பலூர் நாடாளுமன்ற வேட்பாளர் திரு. ராஜசேகரனுக்கு, நகரக் கழக அலுவலகத்தில், மாவட்டக் கழகச் செயலாளர் திரு. கார்த்திகேயன் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய திரு. ராஜசேகரன், கழகத்தினர் அனைவரும் ஒத்துழைப்போடு பாடுபட்டு, 40 தொகுதியிலும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் வெற்றிபெற சூளுரை ஏற்போம் என தெரிவித்தார். கூட்டணிக் கட்சியான எஸ்.டி.பி.ஐ. நிர்வாகிகளும் இதில், கலந்து கொண்டனர். பா.ம.க கட்சியைச் சேர்ந்த 25க்கும் மேற்பட்டோர் இந்த நிகழ்ச்சியின்போது கழகத்தில் தங்களை இணைத்துக்கொண்டனர்.
நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதியில் பொரவச்சேரி ஊராட்சி சார்பில், அங்கு கழகத் தேர்தல் அலுவலகத்தை, தெற்கு மாவட்டக் கழக செயலாளர் திரு. ஆர். சந்திரமோகன் திறந்துவைத்தார். கழக நிர்வாகிகள் மற்றும் எஸ்.டி.பி.ஐ கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.
சிதம்பரம் நகர கழக அலுவலகத்தில், கடலூர் மேற்கு மாவட்ட செயலாளர் திரு. கே.எஸ்.கே. பாலமுருகன் தலைமையில், கழக வேட்பாளர் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ஏராளமான நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்துகொண்டு சிதம்பரம் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் கழக வேட்பாளர் திரு. A. இளவரசனுக்கு சால்வை அணிவித்து வெற்றிபெற வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற கழக வேட்பாளர் திரு. பாண்டி, மானாமதுரை சட்டமன்ற கழக வேட்பாளர் திரு.மாரியப்பன் கென்னடி ஆகியோருக்கு, கழக தொண்டர்கள், கழக நிர்வாகிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். அதனை தொடர்ந்து மானாமதுரை, சிவகங்கை, திருப்பத்துர், காரைக்குடி ஆகிய பகுதிகளில் தேர்தல் அலுவலகங்கள் திறக்கப்பட்டன.