அவலங்கள் அரங்கேறும் எடப்பாடி கூடாரம் : நாளுக்கு நாள் வலுவிழக்கும் பரிதாபம் - கட்சியின் நிலையை அம்பலப்படுத்தும் முக்கிய புள்ளிகள்
Mar 19 2019 6:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாடாளுமன்றத் தேர்தலில் இ.பி.எஸ். தரப்பினர் அமைத்த கூட்டணி தொடங்கி, தொகுதி ஒதுக்கீடு, வேட்பாளர் பட்டியல் தயாரிப்பு வரை கோஷ்டி பூசல் நாள்தோறும் வெவ்வேறு வடிவங்கள் எடுத்து அலங்கோலமாகி வருகின்றன. ராஜகண்ணப்பன் போன்ற மூத்த தலைவர்கள் சிலர் கட்சியை விட்டு வெளியேறி வரும் நிலையில், அக்கட்சியின் இன்றைய தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்ச்சியைக் கூட பலரும் புறக்கணித்துள்ளனர். இதனால் இ.பி.எஸ். - ஓ.பி.எஸ். கூடாரம் நாளுக்கு நாள் கலகலத்து வருகிறது.
மெகா கூட்டணி என்ற மாயத் தோற்றத்தை ஏற்படுத்திய எடப்பாடி தரப்பினர், அரசியல் கட்சித் தலைவர்களின் வீடுகளுக்கு படையெடுத்து ஒருவழியாக கூட்டணி என்று அறிவித்தாலும், அந்த கூடாரத்தில் அரங்கேறிவரும் கோமாளி கூத்துகள் அதன் பலவீனத்தை அம்பலப்படுத்தி வருகிறது. கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி ஒதுக்கீடு அறிவிப்பின்போது பா.ஜ.க.வைத் தவிர மற்ற கட்சிகள் அந்த நிகழ்ச்சியை புறக்கணித்த நிலையில், தேர்தல் சீட்டுக்காக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ராஜன்செல்லப்பா, அக்ரி கிருஷ்ணமூர்த்தி என ஒவ்வொரு தரப்பினரும் அடித்துக்கொண்ட அலங்கோல காட்சிகளும், எடப்பாடி கூடாரத்தின் அவலத்தை வெளிச்சம்போட்டு காட்டின.
இதனால், கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட முடியாமலும், பத்திரிகையாளர்களை சந்திக்க முடியாமலும் ஓ.பி.எஸ்., இ.பி.எஸும் அவசர அவசரமாக கட்சி அலுவலகத்தை விட்டு ஓட்டம்பிடித்த காட்சிகள் யாராலும் மறக்க முடியாதவை. இதுபோன்ற கோமாளி கூத்துகளுக்கு மத்தியில் சீட் கிடைக்காத விரக்தியில் மூத்த தலைவர்களில் ஒருவரான ராஜகண்ணப்பன் அக்கட்சியில் இருந்து வெளியேறி எதிரி முகாமான தி.மு.க.வில் தன்னை ஐக்கியப்படுத்தியுள்ளார். அத்துடன் எடப்பாடி கூட்டத்தின் பல்வேறு அட்டூழியங்களையும் அவர் அம்பலப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, தேர்தல் சீட் கிடைக்காமல் தற்போது வேதனையின் உச்சத்திலும், எந்த கட்சிக்கு தாவலாம் என்ற மனநிலையிலும் இருக்கும் டாக்டர் மைத்ரேயனும் தன் பங்கிற்கு எடப்பாடி கூட்டத்தை அச்சுறுத்தியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தான் அமைதியுடன் இருப்பது ஓய்ந்துபோவதற்கு அல்ல என்றும், காத்திருப்பது புயலென புறப்படத்தான் என்றும் ஒரு கவிதையை மேற்கோள்காட்டி குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற அலங்கோல நிகழ்வுகள் தொடர்ந்து இ.பி.எஸ்., ஓ.பி.எஸ். கூடாரத்தை மிரட்டிக்கொண்டிருப்பதால் அந்த கூடாரம் மேலும் கலகலத்து வருகிறது. இந்த நெருக்கடியான சூழலில்தான் தொண்டர் பலமோ, நிர்வாகிகளின் கூட்டமோ இல்லாமல் நடந்து முடிந்திருக்கிறது தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி. இதையெல்லாம் பார்க்கும்போது தேர்தல் நெருங்கும் சமயத்தில் இந்த கூடாரம் சேதாரமாகி, அதற்கான ஆதாரம் கூட இல்லாமல் போகும் என்றே தோன்றுகிறது.