உசிலம்பட்டியில் பணி நேரத்தில் போதையில் மிதந்த வருவாய் கோட்டாட்சியர் : பணி நீக்கம் செய்யக் கோரி வழக்கறிஞர்கள் போராட்டம்
Mar 21 2019 12:35PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஓபிஎஸ் மகன் வேட்பாளராக நிற்கும் தொகுதியில் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் தேர்தல் பணியை செய்யாமல் பணி நேரத்திலும் மது போதையில் அலுவலகத்தில் படுத்து உறங்கும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகிவருகிறது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியராக இருப்பவர் முருகேசன். இவர் உசிலம்பட்டிக்கு பணிமாறுதலாகிய நிலையில் அலுவலக நேரத்தில் மது போதையில் உள்ளார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதனை உண்மையாக்கும் வகையில் மது அருந்திவிட்டு அலுவலகத்தின் உள்ள ஒரு அறையில் அவர் படுத்து கிடப்பது போன்ற காட்சி தற்போது வாட்ஸ் ஆப்பில் பரவி வருகிறது. கோட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஒரு அறையை வீடு போன்று மாற்றி, கட்டில், மெத்தை போட்டு மது அருந்துவிட்டு வேலை நேரத்தில் அவர் ஓய்வெடுக்கும் வீடியோ வாட்ஸ் ஆப்பில் வெளியாகியுள்ளது. இந்த வீடியோ காட்சி உசிலம்பட்டி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட உசிலம்பட்டி பகுதியில் தேர்தல் அலுவலரான வருவாய் கோட்டாட்சியர் குடிபோதையில் தேர்தல் பணிகளில் அலட்சியமாக செயல்படுவது தேர்தல் ஆணைய நடைமுறையை கேள்வியாக்கியுள்ளது என பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் வருவாய் கோட்டாட்சியர் முருகேசன், பட்டா மாறுதல், மணல் கடத்தல், முதியோர் உதவித்தொகை, நடுவர் நீதிமன்ற வழக்குகள் போன்றவற்றுக்கு லஞ்சம் வாங்குவதாக குற்றம்சாட்டி , முருகேசனை பணிநீக்கம் செய்யக்கோரி உசிலம்பட்டி பார் கவுன்சில் வழக்கறிஞர்கள் 50க்கும் மேற்பட்டோர் உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.