மதுரை மேலூரில் வாக்களிப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்த மூதாட்டிகளின் பெயர்கள் நீக்கம் - வாக்களிக்க முடியாமல் ஏமாற்றம் : ஒருவர் வாக்கினை மற்றொருவர் செலுத்தியதாக பல்வேறு புகார்
Apr 19 2019 12:17PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மேலூரில் வாக்களிப்பதற்காக பல மணி நேரம் காத்திருந்த மூதாட்டிகளின் பெயர்கள், பட்டியலில் இடம்பெறாததால், வாக்களிக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டியை சேர்ந்த ஏராளமான மூதாட்டிகளின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் நீக்கப்பட்டதாக தேர்தல் அலுவலர்கள் கூறியதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த மூதாட்டிகள், வாக்களிக்காமல் திரும்ப முடியாது எனக்கூறி இரவு 7 மணிவரை வாக்குச்சாவடி அருகிலேயே அமர்ந்திருந்தனர். அவர்களை வீட்டுக்குச் செல்ல வேண்டுமென காவல்துறையினர் அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.
இதனிடையே, திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதியில் 250-வது வாக்குச்சாவடியில் YMR பட்டியைச் சேர்ந்த குழந்தை தெரசா என்ற பெண்
வாக்கு செலுத்த வந்தபோது, அவரது வாக்கு ஏற்கனவே செலுத்தப்பட்டதாக தேர்தல் அதிகாரி தெரிவித்தார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனையடுத்து குழந்தை தெரசாவை சமாதானப்படுத்திய அதிகாரிகள், டெண்டர்பேலட் ஓட்டு வழங்கினர். இதனையடுத்து குழந்தை தெரசா வாக்களித்தார்.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கன்னிமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இராமசுப்பிரமணியம் என்பவர், திருஇருதய பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் வாக்கு செலுத்த சென்றபோது, அவரது வாக்கினை வேறு ஒருவர் செலுத்தியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேர்தல் அலுவலரை அணுகியதை அடுத்து, 17B, 49B-ன்படி இராமசுப்பிரமணியம் தனது வாக்கை பதிவு செய்தார்.
சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில், நேற்று மாலை 4 மணியளவில் 69-ஆவது அறையில், இயந்திரக் கோளாறு ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்களிக்க முடியாமல் சிரமம் அடைந்தனர். பின்னர் வாக்கு இயந்திரங்கள் சரிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அரசியல் கட்சியினர் உள்ளே செல்ல முயன்றதால் அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.