சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறித்த பயிற்சி முகாம் : துணைத் தேர்தல் ஆணையர்கள் பங்கேற்று ஆலோசனை
May 15 2019 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணுவது தொடர்பான பயிற்சி முகாம், சென்னையில் நடைபெற்றது.
நாடாளுமன்ற மக்களவைக்கு 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஆறு கட்டத் தேர்தல்கள் ஏற்கெனவே முடிந்த நிலையில், ஏழாம் கட்டத் தேர்தல், வரும் 19-ம் தேதி நடைபெறவுள்ளது. தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 23-ஆம் தேதி எண்ணப்படுகின்றன. ஆனால் இந்த முறை ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் 5 சதவீத வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை ஒப்புகைச் சீட்டுகளுடன் ஒப்பிட்டு எண்ண வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுபோன்ற புதிய நடைமுறைகளால் மாநிலங்களின் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், தேர்தல் அலுவலர்களுக்கு தலைமைத் தேர்தல் ஆணையம் பயிற்சி வழங்க முடிவு செய்துள்ளது. அதன்படி, சென்னை சின்னமலையில் உள்ள தனியார் ஹோட்டலில் இன்று அதற்கான பயிற்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, குஜராத், புதுச்சேரி மற்றும் லட்சத்தீவுகளின் தேர்தல் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். தலைமைத் தேர்தல் ஆணையத்தின் துணை ஆணையர்கள் திரு. சந்தீப் சக்சேனா, திரு. உமேஷ் சின்ஹா, தேர்தல் செலவின இயக்குனர் திரு. திலிப் சர்மா ஆகியோர் பங்கேற்று பயிற்சி அளித்தனர்.