தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றைக்கும் அ.ம.மு.க நிற்கும் என்றும் உறுதி
May 22 2019 3:28PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைத்திட வேண்டும் என அ.ம.மு.க. பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி சம்பவத்தில் சுட்டுக்கொல்லப்பட்ட 13 பேருக்கு முதலாமாண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் வகையில், திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நினைத்தாலே நெஞ்சை பதறவைக்கும் வகையில், தூத்துக்குடியில் கொடுங்கோலர்களால் 13 பேர் சுட்டுக் கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ள போதிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இன்னும் நீதி கிடைக்கவில்லை என்பது வருத்தம் அளிப்பதாக உள்ளதென கூறியுள்ளார்.
தமிழக வரலாற்றிலேயே இப்படி ஒரு பயங்கரம் இதுவரை நிகழ்ந்ததில்லை என்று சொல்லும் அளவிற்கு கடந்த ஆண்டு மே மாதம் 22ம் தேதி தூத்துக்குடியில் அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டிருக்கும் துரோக கும்பல் சொந்த மக்களையே நர வேட்டையாடியதாக வேதனை தெரிவித்துள்ளார்.
சுவாசிக்கும் காற்றையும், குடிக்கும் தண்ணீரையும் நச்சாக மாற்றி தங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் ஸ்டெர்லைட் ஆலை வேண்டாம் என மக்கள் கேட்டதற்காக, ஹிட்லர், இடி அமின் போன்றோரை மிஞ்சும் அளவிற்கு துரோக ஆட்சியாளர்கள் நடந்து கொண்டனர் என திரு. டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
13 பேரையும் மிகக் கொடூரமான முறையில்தான் காவல்துறை சுட்டு வீழ்த்தியது - அத்தனை பெரிய பயங்கரம் நடந்த பிறகும், எடப்பாடி பழனிசாமி தூத்துக்குடி பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை - உகாண்டாவிலும், உஸ்பெகிஸ்தானிலும் யாராவது இறந்தால்கூட உடனே ட்விட்டரில் இரங்கல் தெரிவிக்கும் பிரதமர் மோடி, சொந்த நாட்டின், தூத்துக்குடியில் நடந்த சம்பவத்திற்கும் தமக்கும் தொடர்பே இல்லாதது போல் இருந்துவிட்டதாக திரு. டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
ஸ்டெர்லைட் ஆலை எப்போதும் திறக்கப்படக் கூடாது என்ற கொள்கை முடிவை தமிழக அரசு உடனே எடுக்கவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
கொல்லப்பட்ட 13 பேருக்கும் நினைவுச் சின்னம் அமைக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். ஸ்டெர்லைட்டை எதிர்ப்பதில் தூத்துக்குடி மக்களோடு என்றைக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் துணை நிற்கும் என்ற உறுதிமொழியை முதலாமாண்டு நினைவு தினத்தில் அளிப்பதாகவும் திரு. டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.