ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதன் ஒராண்டு நினைவுநாளையொட்டி, பலியானவர்கள் படங்களுக்கு, பொதுமக்கள் மலர்தூவி மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தூத்துக்குடியில் சுற்று சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்த ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு பொதுமக்கள் தன் எழுச்சி போராட்டம் நடத்தினர். அவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிட்ட மக்கள் விரோத எடப்பாடி அரசு, அப்பாவி பொதுமக்கள் 13 பேரை ஈவு இரக்கமின்றி சுட்டு கொன்றது. இதன் முதலாம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் கையில் மெழுகு வர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
தோமையார்நகரில் உள்ள தோமையார் தேவாலயம் முன்பு, ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில், இறந்தவர்களின் படங்களுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கையில் மெழுகுவர்த்தி ஏந்தி மவுன அஞ்சலியும் நடைபெற்றது.
தூத்துக்குடியில் துப்பாக்கி சூடு நடத்தியதன் ஒராண்டு நினைவு நாளையொட்டி, ஆலை அருகேயுள்ள கிராம மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு, ஆலைக்கு எதிராக உறுதி மொழி ஏற்று கொண்டனர். குமாரரெட்டியார்புரம், பண்டாரம்பட்டி உள்ளிட்ட 12 கிராம மக்கள், இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி சூடு நடத்தியதின் ஒராண்டு நினைவு நாளை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாட்டு படகுகள் கடலுக்குச் செல்லவில்லை. மீன் பிடி தடை காலம் காரணமாக விசைப்படகுகள் ஏற்கனவே மீன் பிடிக்க செல்லாமல் இருக்கும் நிலையில், மாவட்டம் முழுவதும் உள்ள 4 ஆயிரம் நாட்டு படகுகளும் இன்று கடலுக்குள் செல்லாமல் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு இயக்கம் மற்றும் வியாபாரிகள் சார்பில், போராட்டத்தில் உயிரிழந்தவர்களின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னர் அஞ்சலி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள், ஆலைக்கு எதிராக உறுதி மொழி எடுத்துக் கொண்டனர்.
இதேபோல் திருநெல்வேலி மாவட்டத்தில், உவரி, கூடுத்தாழை, கூடங்குளம், இடிந்தகரை உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் இன்று, மீன்பிடிக்க கடலுக்குள் செல்லவில்லை. இதனால் படகுகள் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. மேலும் மீனவ கிராம மக்கள், பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.