தண்ணீர் பிரச்சனையை காரணம் காட்டி அம்மா குடிநீரை முடக்கும் எடப்பாடி அரசு - பொதுமக்கள் கொந்தளிப்பு
Jun 21 2019 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மாண்புமிகு அம்மா கொண்டுவந்த உன்னத திட்டமான "அம்மா குடிநீர் திட்டம்" மக்கள் விரோத எடப்பாடி அரசின் அலட்சியப் போக்கால் முடங்கும் அபாயத்தில் உள்ளது.
குறைந்த விலையில் அனைவரும் பயன்பெறும் வகையிலும், அரசு போக்குவரத்து துறை ஊழியர்களுக்கு பணிகள் வழங்கிடும் வகையிலும் மாண்புமிகு அம்மா தொடங்கிய தரமான "அம்மா குடிநீர் திட்டம்" பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. அம்மாவின் மறைவுக்குப் பின்னர், சுயநலப் போக்கோடு செயல்பட்டு வரும் எடப்பாடி பழனிசாமி அரசு, பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில் அலட்சியம் காட்டி வருகிறது.
அந்த வகையில், அனைத்து தரப்பு மக்களாலும் வரவேற்பு பெற்றுள்ள அம்மா குடிநீர் திட்டத்தை, குடிநீர் தட்டுப்பாட்டை காரணம் காட்டி முடக்க முயன்று வருகிறது. குடிநீர் பாட்டில்கள் வரத்து இல்லையெனக் கூறி அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் பல இடங்களில் மூடப்பட்டுள்ளன. குறிப்பாக நாள்தாறும் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்துசெல்லும் மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை மையம் மூடப்பட்டிருப்பதால் பலரும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் கூடுதல் விலைக்கு, குடிதண்ணீரை வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும், விற்பனை மையங்களில் அச்சிடப்பட்டிருந்த அம்மாவின் திருவுருவப் படங்களும் மறைக்கப்பட்டு, சுயநல சக்தியாக திகழும் எடப்பாடியின் படங்கள் மட்டும் இடம்பெற்றிருப்பது, கழகத் தொண்டர்கள் மட்டுமின்றி, பொதுமக்களையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
இதேபோல், சென்னையிலும் பல இடங்களில் அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் மூடப்பட்டிருப்பதால், பொதுமக்களும் பயணிகளும் திண்டாட்டத்திற்கு ஆளாகியுள்ளனர். எடப்பாடி பழனிசாமியின் நிர்வாக சீர்கேடும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளாததுமே இதற்குக் காரணம் என பலரும் குற்றம் சாட்டுகின்றனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் பேருந்து நிலையத்திலும் அம்மா குடிநீர் விற்பனை மையங்கள் மூடப்பட்டுள்ளன.
தமிழகம் முழுவதும் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வரும் இந்த நேரத்தில், பயணிகளுக்கும் பொதுமக்களுக்கும் வரப்பிரசாதமாக இருந்து வரும் அம்மா குடிநீர் மையங்கள் மூடப்பட்டிருப்பது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏழை - எளிய மக்கள் பயன்பெறும் வகையில் தொடங்கப்பட்ட இந்த மகத்தான திட்டம், முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அனைத்து தரப்பு மக்களும் ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர்.