உயர்மின் கோபுரம் அமைப்பதற்காக தோப்புகளை அழிக்க முற்பட்ட அதிகாரிகள் : எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் போராட்டம் - அதிகாரிகளுடன் விவசாயிகள் கடும் வாக்குவாதம்
Jun 21 2019 3:43PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஈரோடு அருகே விளைநிலங்களில் உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்ததால் பரபரப்பு நிலவியது.
விளைநிலங்கள் வழியாக உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு ஈரோடு, கோவை, சேலம், திருப்பூர் உள்ளிட்ட 13 மாவட்ட விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்தநிலையில், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி மின் கோபுரங்கள் அமைக்கும் பணி பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. ஈரோடு மாவட்டம், புதுப்பாளையத்தில் தென்னந்தோப்புகளை அழித்துவிட்டு மின் கோபுரம் அமைக்க குழி தோண்டும் பணிக்காக அதிகாரிகள் 2 பொக்லைன் இயந்திரங்களுடன் சென்றனர். அப்போது அதிகாரிகளை தடுத்து நிறுத்திய விவசாயிகள், தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அதிகாரிகளை திரும்பிச் செல்லும்படி வலியுறுத்தினர். ஆனால் அதிகாரிகள் திரும்பிச் செல்ல மறுத்ததால், விவசாயிகளுக்கும் அதிகாரிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், போராட்டத்தில ஈடுபட்ட விவசாயிகள் 13 பேரை வலுக்கட்டாயமாக கைது செய்தனர்.
விவசாயிகள் எதிர்ப்பை மீறி, பொக்லைன் இயந்திரங்களுடன் விளை நிலத்திற்குள் புகுந்த அதிகாரிகளும் போலீசாரும், அங்கிருந்த 34 தென்னை மரங்களை வெட்டி சாய்த்தனர். தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் மின்கோபுரம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அதிகாரிகள் இந்த அத்துமீறல் விவசாயிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.