ஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து விபத்து : அமோனியா வாயு கசிவால் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய மக்கள் - தொழிற்சாலை உரிமையாளர் இருவர் கைது
Jul 8 2019 6:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே ஐஸ் தொழிற்சாலையில் திடீரென சிலிண்டர் வெடித்து அமோனியா வாயு கசிந்ததால், அச்சமடைந்த அப்பகுதி குடியிருப்புவாசிகள் உடனடியாக அங்கிருந்து வெளியேறினர்.
குளச்சல் அருகே வாணியக்குடி மீனவக் கிராமத்தில் 4 ஐஸ் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. ஒரு தொழிற்சாலை வழக்கம்போல் இன்று இயங்கிக்கொண்டிருந்தபோது திடீரென அங்கிருந்து அமோனியாக வாயு சிலிண்டர் வெடித்தது. இதில் அமோனியா வாயு அப்பகுதியில் பரவிதால் பீதியடைந்த அப்பகுதி குடியிருப்புகளை சேர்ந்தவர்கள், குழந்தைகளுடன் அப்பகுதியிலிருந்து உடனடியாக வெளியேறினர். தீயணைப்பு துறையினரை
வரவழைத்து வாயுவை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 4 மணி நேரத்திற்கும் மேலாக தொழிற்சாலையில் தண்ணீர் பீய்ச்சி அடித்து வாயு கட்டுப்படுத்தப்பட்டது.
இதனிடையே ஆலை தொழிலாளர்கள் இருவர் மற்றும் அப்பகுதியை சேர்ந்த முதியவர் மயக்கமடைந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். உரிமையாளரின் கவன குறைவால் இவ்விபத்து நடைபெற்றதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்ததையடுத்து, உரிமையாளர் சேசு அந்தோணி மற்றும் அவரது மகன் லெஸ்லின் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.