மயிலாடுதுறையை தனி மாவட்டமாக்க கோரிக்கை : மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் கடையடைப்பு
Jul 19 2019 4:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்காததை கண்டித்து, நாகை மாவட்டம், மயிலாடுதுறை, குத்தாலம் உள்ளிட்ட பல பகுதிகளில் வியாபாரிகள் கடையடைப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டமும், காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு செங்கல்பட்டு மாவட்டமும் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பு, கடந்த 25 ஆண்டுகளாக தனி மாவட்டம் கேட்டு போராடி வரும் மயிலாடுதுறை கோட்ட மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக மயிலாடுதுறையில் வர்த்தக சங்கங்கள், சேவை சங்கங்கள், விவசாய சங்கங்கள், அனைத்து கட்சிகள் வழக்கறிஞர் சங்கங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் ஒன்றிணைந்து ஆலோசனை நடத்தினர். அதில், மயிலாடுதுறையை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்காததை கண்டித்து கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று மயிலாடுதுறை, குத்தாலம், செம்பனார்கோயில், தரங்கம்பாடி பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சீர்காழி பகுதியில் மட்டும் நாளை கடையடைப்புப் போராட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.