அதிகாரிகளின் மெத்தனப்போக்கே நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவதற்கு காரணம் - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கண்டனம்
Aug 2 2019 2:36PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கே நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு முக்கிய காரணம் என கரூர் இரட்டை கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து தெரிவித்துள்ளது.
நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல வழக்கிற்கு உதவியதாக கரூரைச் சேர்ந்த நல்லதம்பி மற்றும் அவரது தந்தை வீரமலை ஆகியோர் ஆக்கிரமிப்புகாரர்களால் கொலை செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத்தரப்பில், இந்த கொலை வழக்கு தொடர்பாக மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் 6 பேர் சரணடைந்துள்ளனர் என்றும் திருச்சியில் ஒருவர் சரணடைந்துள்ளதாகவும், மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கு விசாரணை குறித்து குளித்தலை டி.எஸ்.பி நிலை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 14 ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.