ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்கும் எடப்பாடி பழனிசாமி - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம்
Aug 2 2019 6:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஆட்சியை தக்க வைத்துக்கொள்வதற்காக, தமிழகத்தின் அனைத்து உரிமைகளையும் விட்டுக்கொடுக்க எடப்பாடி பழனிசாமி தயாராக இருப்பதாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம் உருக்காலையை தனியாருக்கு விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவைக் கண்டித்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் மாவட்டச் செயலாளர் திரு.ராமமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில், மாநிலச் செயலாளர் திரு.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.
அப்போது பேசிய திரு.பாலகிருஷ்ணன், அனைத்து பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வரும் மத்திய பாரதிய ஜனதா அரசு, எதிர்காலத்தில் இந்தியாவையே தனியாருக்கு விற்பனை செய்யும் நிலைக்குக்கூட தயாராக இருப்பதாக குற்றம்சாட்டினார்.