துபாயிலிருந்து இன்றுகாலை சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3.2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல்
Aug 4 2014 3:52PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
துபாயிலிருந்து இன்றுகாலை சென்னை வந்த விமானப் பயணியிடமிருந்து, ஒன்றரை கோடி ரூபாய் மதிப்புள்ள 3.2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
துபாயிலிருந்து சென்னை வரும் தனியார் விமானம் ஒன்றில், பயணம் செய்யும் விமானி ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக சென்னையில் உள்ள மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து 6 பேர் கொண்ட குழு, தனியார் விமானத்தில் குறிப்பிட்ட அந்தப் பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அப்போது அந்தப் பயணியின் பெட்டியில் 3.2 கிலோ எடை கொண்ட தங்கக் கட்டிகள் இருந்தது தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்த வருவாய்த்துறையினர், அப்துல் முபீன் என்ற அந்தப் பயணியை கைது செய்தனர். இந்தக் கடத்தலின் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? என்று விசாரணை நடைபெற்று வருகிறது. நேற்று சிங்கப்பூரிலிருந்து சென்னை வந்த 4 பயணிகளிடமிருந்து சுமார் 4 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, சென்னை விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்கத்துறை பெண் அதிகாரியை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த 4 பேர் பயங்கர ஆயுதங்களுடன் வந்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில், போலீசார் விரைந்து செயல்பட்டு பெண் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்த 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.