திருச்சி விமான நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகள் - சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றினர்
Oct 29 2014 10:20AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருச்சி விமான நிலையத்தின் கழிவறையில் கேட்பாரற்று கிடந்த ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான தங்க கட்டிகளை, சுங்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
திருச்சியில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து, சிங்கப்பூர், மலேசியாஉ ள்ளிட்ட வெளிநாடுகளுக்கு நாள்தோறும் இருவழிகளில் விமானப் போக்குவரத்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், அண்மைக்காலமாக வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தி வரப்படுவது அதிகரித்துள்ள நிலையில், விமான நிலையத்தில் கண்காணிப்புப் பணியை சுங்கத் துறை அதிகாரிகள் தீவிரப்படுத்தியுள்ளனர். வழக்கம்போல் இன்று அதிகாலை விமான நிலைய வளாகத்தில் சுகாதாரப் பணியை மேற்கொண்ட பணியாளர்கள், அங்குள்ள கழிவறை அருகே மர்மப் பெட்டி கிடப்பது குறித்து சுங்கத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து வந்த அதிகாரிகள் மர்மப் பெட்டியை கைப்பற்றி சோதனையிட்டனர். அதில், தலா 100 கிராம் வீதம் 32 தங்கக் கட்டிகள் வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், தங்கக் கட்டிகளை கடத்தி வந்த மர்ம நபரை அடையாளம் காண, விமான நிலையத்தின் கண்காணிப்புக் கோமிராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளின் சர்வதேச மதிப்பு ஒரு கோடி ரூபாய் என சுங்கத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.