நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கு - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீது 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Jan 23 2020 1:38PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீதிமன்றத்தை அவதூறாகப் பேசிய வழக்கில், பாஜக தேசிய செயலாளர் திரு. ஹெச். ராஜா மீது 2 மாதத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேச காவல்துறை அனுமதி மறுத்தது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பா.ஜ.க. தேசிய செயலாளர் திரு.ஹெச்.ராஜா காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதோடு, நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தி இழிவான சொற்களில் விமர்சித்தார்.
இது தொடர்பாக திருமயம் காவல் நிலையத்தில் பதிவான வழக்கு திருமயம் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில், ஹெச்.ராஜா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறை தயங்குவதாகக்கூறி, உயர்நீதிமன்ற வழக்கறிஞரான துரைசாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, 2 மாதத்தில் ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய திருமயம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டார்.