குரூப்-4 தேர்வு முறைகேடு : அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலர் உட்பட 9 பேர் கைது
Jan 26 2020 5:45PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வு முறைகேடு விவகாரத்தில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலரான ஓம்காந்தன் உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. மூலம் அண்மையில், குரூப்-4 தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வின்போது ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் முறைகேடுகள் நடைபெற்றது அம்பலமானது. இதுதொடர்பாக நூற்றுக்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரத்தில் 7 பேர் ஏற்கனவே கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், குரூப்-4 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டதாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலரான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஓம்காந்தன், தேனி மாவட்டம் சீலையம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பாலசுந்தர்ராஜ் என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், இந்த செயலுக்கு முக்கிய குற்றவாளியான, தலைமறைவாக உள்ள ஜெயக்குமாரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஏற்கெனவே குரூப்-1 தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட இடைத்தரகர்களுக்கு குரூப்-4 தேர்வு முறைகேட்டிலும் தொடர்பு இருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக ஏற்கெனவே விசாரணை நடத்தப்பட்ட 2 தாசில்தார்கள், சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்குப் பிறகு இன்று விடுவிக்கப்பட்டனர்.