குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகின்றன.
சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது தடியடி நடத்திய காவல்துறையினரை கண்டித்தும், குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற கோரியும் மதுரை மகபூப்பாளையம் ஜின்னாதிடல் பகுதியில் இஸ்லாமிய பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் 10வது நாளாக இரவிலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூரில் நடைபெற்ற போராட்டக்க் கூட்டத்தில் மே 17 இயக்கத்தினர் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், இந்திய பாதுகாப்பு தொடர்பாக அமெரிக்காவுடன் ஒப்பந்தம் மேற்கொள்வது பாதுகாப்பாக அமையுமா என கேள்வி எழுப்பினர்.
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் சவப்பெட்டியுடன் ஊர்வலமாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊர்வலகத்தின் போது, குடியுரிமை திருத்த சட்டம் தேவையில்ல என்ற வாசகங்கள் அடங்கிய சவப்பெட்டியை போராட்டக்காரர்கள் எடுத்து வந்திருந்தனர்.
CAA, NRC, NPR உள்ளிட்ட சட்ட திருத்தங்களை எதிர்த்து, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள ரஹமத் மஸ்ஜித் பள்ளி வாசல் முன்பாக இஸ்லாமியர்கள் 14 வது நாளாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த போராட்டத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் யூத் லீக் தேசிய பொருளாளர் முகமதுயூனுஸ் மற்றும் இஸ்லாமிய ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட பேகம்பூரில் உள்ள மைதானத்தில் இஸ்லாமிய கூட்டமைப்பினர் மற்றும் இஸ்லாமிய இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் கடந்த 19ம் தேதி முதல் காலவரையற்ற தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் . போராட்டத்தில் ஈடுபட்டு வருவோரை இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைவர் பாக்கர் நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார்.
நெல்லை மாவட்டம், மேலப்பாளையத்தில் 16வது நாளாக இஸ்லாமியர்கள் போராட்டம் நடைபெற்று வருகிறது. இரவு விடிய விடிய தொடர்ந்த போராட்டத்தில் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஆதரவு தெரிவித்துள்ளனர். இதேபோல் வள்ளியூர் அருகே உள்ள திசையன்விளையில் குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து அனைத்துக் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் 9வது நாளாக இரவு தொடர் இருப்பு போராட்டம் நடைபெற்றது. இஸ்லாமிய பெண்கள் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றனர். குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என அவர்கள் கோஷம் எழுப்பினர்.
கன்னியாகுமரி மாவட்டம் திருவிதாங்கோட்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்லாமிய பெண்கள் மற்றும் சிறுவர்கள் கலந்து கொண்ட பேரணி மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அழகியமண்டபத்தில் இருந்து புறப்பட்ட இந்த பேரணி சுமார் 5 கிமீ தூரம் வரை சென்று திருவிதாங்கோடு சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.