வடகலை - தென்கலை பிரிவினர் இடையேயான மோதல் குறித்த வழக்கு : கோவிலில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து
Feb 27 2020 9:29PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கோவிலில் தனிநபர் பகைக்கோ, எதேச்சதிகாரத்துக்கோ இடமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், நாலாயிர திவ்யப்பிரபந்தம் பாடுவதில், வடகலை மற்றும் தென்கலை பிரிவினருக்கு இடையில் மோதல் இருந்து வந்தது. திவ்ய பிரபந்தம் பாடும் முன் ஸ்ரீராமனுஜ தயாபத்ரம் என்ற மந்திரத்தை உச்சரிக்க வடகலை பிரிவினருக்கு தடை கோரிய வழக்கில், தடை விதிக்க மறுத்த உயர்நீதிமன்றம், வடகலை பிரிவினர் மந்திரம் உச்சரிக்கவும், திவ்யப்பிரபந்தம் பாடவும் அனுமதியளித்து, கடந்த 1915 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் தீர்ப்பளித்தது. அதேசமயம், தென்கலை பிரிவினர் முதலில் பாட அனுமதியளிக்கப்பட்டது.
ஆனால், நீதிமன்ற தீர்ப்பை மீறி வடகலை பிரிவினரை முதலில் பாட அழைத்ததாக, கோவில் நிர்வாக அறங்காவலர் தியாகராஜன் மீது குற்றம் சாட்டி, ரங்கநாதன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்தார். கோவில் நிர்வாக அறங்காவலர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், வடகலை மற்றும் தென்கலை பிரிவினரிடையே தொடரும் மோதலால் பூஜைகள் பாதிக்கப்படுவதாக குறிப்பிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், கடந்த 1915 மற்றும் 1969-ம் ஆண்டுகளில் உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை கண்டிப்புடன் பின்பற்ற வேண்டும் என உத்தரவிட்டார். பிரபந்தம் பாடும் முன் தென்கலை பிரிவினர் ஸ்ரீசைல தயாபத்ரம் மந்திரத்தை முதலிலும், பின் வடகலை பிரிவினர் ராமானுஜ தயாபத்ரம் மந்திரத்தை உச்சரிக்கவும் அனுமதியளித்த நீதிபதி, வழக்கை முடித்து வைத்தார்.