போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களை பணிமாற்றம் செய்து பிறப்பித்த உத்தரவு ரத்து - சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
Feb 28 2020 12:12PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அரசு மருத்துவர்கள் போராட்டம் நடத்த உரிமையில்லை எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், போராட்டத்தில் ஈடுபட்ட அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்த உத்தரவுகளை ரத்து செய்து தீர்ப்பளித்தது.
ஊதிய உயர்வு, பதவி உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த அக்டோபர் மாதம் அரசு மருத்துவர்கள் தொடர் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் போராட்டம் திரும்பப்பெறப்பட்ட நிலையில், மருத்துவர் சிலருக்கு பணிமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை எதிர்த்து சென்னையைச் சேர்ந்த அரசு மருத்துவர் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட மருத்துவர்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட உரிமையில்லை எனத் தெரிவித்தார். போராட்டத்தில் ஈடுபட்டதாக அரசு மருத்துவர்களை பணிமாற்றம் செய்தும், சார்ஜ் மெமோ வழங்கியும் அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்த நீதிபதி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும் என அறிவுறுத்தினார்.