வெளிநாடு சென்று திரும்பிய 2,500-க்கும் மேற்பட்டோர் தீவிர கண்காணிப்பு : நாகை மாவட்ட ஆட்சியர் பேட்டி
Mar 28 2020 12:25PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வெளிநாடு சென்று திரும்பிய 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர், தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக, நாகை மாவட்ட ஆட்சியர் திரு. பிரவின் நாயர் தெரிவித்துள்ளார்.
நாகையில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு இருக்கும் நிலையில், இளைஞர்கள் உள்ளிட்ட சிலர், அநாவசியமாக வெளியே சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளதாக தெரிவித்தார். இளைஞர்கள் வெளியே சுற்றுவதை குறைக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் பெட்ரோல் நிலையங்களுக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதாகவும், இருவருக்குமேல் இருசக்கர வாகனங்களில் பயணம் மேற்கொண்டால் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் எச்சரித்தார்.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துதல் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் ரத்னா மற்றும் உயர் அதிகாரிகள், மருத்துவர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர். அப்போது, கொரோனா வைரஸை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும் வெளிநாடுகளில் இருந்து வந்த ஆயிரத்து 318 பேர் தீவிர கண்காணிப்பில் இருந்து வருவதாகவும், கொரோனா சிகிச்சைக்காக, அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 979 படுக்கைகளும், 15 செயற்கை சுவாச கருவிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
கடலூர் நகராட்சி மூலம் கடலூர் நகராட்சிக்குட்பட்ட 45 வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று தூய்மைப் பணியாளர்கள் கிருமி நாசினி தெளிப்பான்களை தெளித்து வருகின்றனர். புதுப்பாளையத்தில் ட்ரோன் மூலம் கிருமிநாசினி அனைத்து வீடுகளிலும் தெளிக்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் திரு. வெ. அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில், ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டு வருவதாக குறிப்பிட்டார்.