144 தடை உத்தரவால், கொள்முதல் செய்ய வியாபாரிகள் முன்வராததால், செங்கல்பட்டு மாவட்டத்தில், ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவிலான தர்பூசணி பழங்கள், அழுகி, வீணாகி வருகின்றன.
உடலில் உள்ள உஷ்ணத்தைப் போக்கி, நீர்ச்சத்தை அதிகரிக்கும் பழங்களில், தர்பூசணிக்கு என்றுமே முதலிடம்தான். கோடைக்காலங்களில் அதிகம் விரும்பி உண்ணக்கூடிய தர்பூசணி, அதிக நீர்ச்சத்து நிறைந்தது. தாகத்தை தணிக்கும் அருமருந்தான இந்த தர்பூசணி, அதிக மருத்துவ குணங்களையும் கொண்டது.
கோடைக்காலம் நெருங்கிவிட்ட நிலையில், தர்பூசணிக்கான தேவை அதிகரித்துள்ளது. பொதுவாக தர்பூசணி சாகுபடி, ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைபெறும். செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த வெப்பஞ்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மட்டும், சுமார் ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில், விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டிருந்தனர். எதிர்பார்த்தபடி தர்பூசணி விளைச்சல் நன்றாக இருந்ததுடன், அறுவடைக்கும் தயாரானது.
இந்நிலையில், 144 தடை உத்தரவால் வாகன போக்குவரத்து இல்லாமல் போனதால், வியாபாரிகள் யாரும், தர்பூசணியை வாங்க முன்வரவில்லை. இதனால், ஆயிரத்து 500 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த தர்பூசணி பழங்கள் அனைத்தும், அழுகிப்போகும் நிலையில் உள்ளன.
ஏக்கருக்கு 30 முதல் 40 ஆயிரம் ரூபாய் வரை கடன் வாங்கி செலவு செய்து பயிரிட்ட நிலையில், அனைத்தும் அழுகும் நிலையில் உள்ளதால், வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் விவசாயிகள், வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தவும் வழியில்லாமல் பரிதவிப்பதாக, வேதனை தெரிவிக்கின்றனர்.
எனவே, தர்பூசணி பழங்களை, அரசே கொள்முதல் செய்து, உரிய தொகையை வழங்க வேண்டுமென்று, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.