சென்னை ராயபுரம் உள்ளிட்ட 5 மண்டலங்களில் கோரத்தாண்டவமாடும் கொரோனா - தொடர்ந்து அதிகரிப்பதால் பொதுமக்கள் அச்சம்
May 25 2020 11:14AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சென்னையில் 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் ஆயிரத்து 981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள தகவலின்படி, மொத்தம் 10 ஆயிரத்து 576 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் மொத்தம் உள்ள 15 மண்டலங்களில், 5 மண்டலங்களில் கொரோனா நோய் தொற்று பாதிப்பு ஆயிரத்தை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக ராயபுரத்தில் ஆயிரத்து 981 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அடுத்தபடியாக, கோடம்பாக்கத்தில் ஆயிரத்து 460 பேர் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். திரு.வி.க.நகரில் ஆயிரத்து 188 பேரும், தேனாம்பேட்டையில் ஆயிரத்து 118 பேரும், தண்டையார்பேட்டையில் ஆயிரத்து 44 பேரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அண்ணாநகரில் 867 பேருக்கும், வளசரவாக்கத்தில் 703 பேருக்கும், அடையாறில் 579 பேருக்கும், அம்பத்தூரில் 446 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் 300 பேருக்கும், மாதவரத்தில் 223 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 173 பேரும், பெருங்குடியில் 168 பேரும், மணலியில் 142 பேரும், ஆலந்தூரில் 121 பேரும் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.