திமுகவினருடன் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியினர் சட்டவிரோதமாக மணல் கொள்ளையில் ஈடுபடுவதாக டிடிவி தினகரன் குற்றச்சாட்டு - இந்த ஆண்டாவது காவிரி நீர் கடைமடை பகுதிகள் வரை சென்றடைய தூர்வாரும் பணிகளில் கவனம் செலுத்துமாறும் அறிவுறுத்தல்
May 26 2020 4:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தி.மு.க.வினருடன் கூட்டணி அமைத்து ஆளுங்கட்சியினர் சட்டவிரோத மணல் கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக, அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார். மேட்டூர் அணை வரும் ஜுன் 12ம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டாவது, கடைமடை வரை தண்ணீர் செல்வதை உறுதி செய்ய, தூர்வாருவதில் அரசு கவனம் செலுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மேட்டூர் அணை திறக்கப்பட உள்ள நிலையில், இந்த ஆண்டாவது கடைமடை பாசனப்பகுதி வரை தண்ணீரைக் கொண்டு செல்வதற்கான பணிகளில் அக்கறை காட்டாமல், தி.மு.க.வினரோடு கூட்டணி அமைத்து சட்டவிரோதமாக மணல் அள்ளுவதில் ஆளுங்கட்சியினர் தீவிரமாக இருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
குறுவை பயிர் சாகுபடிக்காக மேட்டூர் அணை வரும் ஜூன் 12-ம் தேதி
திறக்கப்படவிருக்கிறது - இதற்கான அறிவிப்புக்கு முன்பே நீர்நிலைகளைத் தூர்வாரி
சீரமைப்பதற்காக தமிழக அரசு 500 கோடி ரூபாயை ஒதுக்கியிருந்தது - எனினும்
பெரும்பாலான இடங்களில் இதற்கான பணிகள் வெளிப்படையாக நடைபெறவில்லை
என குற்றச்சாட்டுகள் எழுந்தன - இதனால் பணிகள் நடைபெறுவதைப் போல காண்பிப்பதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமித்தார்கள் - அதன்பிறகும் தூர்வாரும்
பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றே தகவல்கள் வருகின்றன என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த இரண்டாண்டுகளைப் போல இந்தாண்டும் தண்ணீர் வரும் கடைசி
நேரத்தில் ஏனோ, தானோவென்று அரைகுறையாக தூர்வாரினால், மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் காவிரி டெல்டாவின் கடைமடை பாசனப் பகுதிகள் வரை முழுமையாக சென்றடையாது என்று விவசாயிகள் கவலையடைந்துள்ளனர் - நிலைமை இப்படியிருக்க, ஊருக்கு ஊர் ஆளுங்கட்சியினரும், பிரதான எதிர்க்கட்சியான தி.மு.க.வினரும் கள்ள கூட்டணி அமைத்துக்கொண்டு சட்ட விரோத மணல் கொள்ளையில்
ஈடுபட்டிருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன - ஆட்சியாளர்கள் இதனை
உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மேலும், கொரோனா கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால், அனைத்து
விவசாயிகளுக்கும் சாகுபடிக்கான உரம் உள்ளிட்ட இடுபொருட்களைக் குறைந்தபட்சம் 50 சதவீத மானியத்தில் வழங்குவதற்கும், அவை தட்டுப்பாடின்றி கிடைப்பதற்கும், தமிழக அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - தொடர்ந்து சாகுபடி பணிகளைச் செய்வதற்கு பெருமளவு பம்ப்செட் பாசனத்தையும் நம்பியிருப்பதால் விவசாயத்திற்காக வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தை நாள்தோறும் குறைந்தபட்சம் 12 மணி நேரம் தடையின்றி வழங்கிட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேபோன்று, விவசாயிகளுக்கு அறிவிக்கப்பட்டிருக்கும் சிறப்புக் கடன்
உதவிகளை வங்கிகள் மறுப்பேதும் சொல்லாமல் வழங்குகின்றனவா என்பதையும், அரசு கண்காணிக்க வேண்டும் - விவசாயம் மற்றும் விவசாயப்பணிகள் தொடர்பாக வரும் முறையீடுகளை, முன்னுரிமை கொடுத்து கவனித்து, தேவையான நடவடிக்கைகளை எடுக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்திட வேண்டும் என்றும் திரு.டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.