புலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாள்வது வெட்கக்கேடாக உள்ளது - சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து
May 27 2020 3:42PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புலம்பெயர் தொழிலாளர்களை தமிழக அரசு கையாள்வது வெட்கக்கேடாக உள்ளதென சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மலைக்கண்ணு, உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். தடை உத்தரவால் புலம்பெயர் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியிருந்த அவர், தொழிலாளர்கள் பலர் தங்களை பதிவு செய்யாமல் உள்ளதாகவும் குறிப்பிட்டிருந்தார். இப்பிரச்னை குறித்து ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டபோது, பதிவு செய்யப்படாத தொழிலாளர்கள் பற்றிய விவரங்களை அவர் கேட்டதாகவும், ஆயிரத்து 600 தொழிலாளர்களின் விவரங்களை அனுப்பி வைத்ததாகவும், தனது மனுவில் தெரிவித்திருந்த மலைக்கண்ணு, இதுதொடர்பாக, இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை எனவும் சுட்டிக்காட்டியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் திரு. P.N. பிரகாஷ், திரு. புகழேந்தி அமர்வு முன்னிலையில் வீடியோ கான்ஃபிரன்சிங் மூலம் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுக்கு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், புலம்பெயர் தொழிலாளர்களை பதிவு செய்ய என்ன நடைமுறை உள்ளதென? கேட்டனர். அவர்களுக்கு நியாயமான கூலி வழங்குவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்த நீதிபதிகள், புலம்பெயர் தொழிலாளர்களை பல்வேறு பணிகளுக்காக பயன்படுத்திவிட்டு, இப்போது கண்டுகொள்ளாமல் இருப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் குறிப்பிட்டனர்.
கேரள மாநிலத்தைவிட்டு புலம்பெயர் தொழிலாளர்கள் செல்ல மறுக்கும் நிலையில், தமிழகத்தில் அவர்களை கையாளும் நிலை வெட்கக் கேடாக உள்ளதென வேதனை தெரிவித்த நீதிபதிகள், இந்த நிலை நீடித்தால், 'வந்தாரை வாழவைக்கும் தமிழகம்' என்பது மேடைப் பேச்சில் மட்டுமே இருக்கும் நிலை உருவாகும் என்றும் குறிப்பிட்டனர்.