டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலைக்கு விற்பனையா? - தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி
May 27 2020 4:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகம் முழுவதும் உள்ள மதுபான கடைகளில் விலைப்பட்டியல் ஒட்டப்பட்டுள்ளதா, அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் டாஸ்மாக் நிறுவனத்துக்கு சராமாரி கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் அதிக விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்யப்படுவதாகக் கூறி, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. டாஸ்மாக் கடைகளில், ஒரு பாட்டில் 70 ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்படுவதாகவும், இதற்கு ரசீதுகள் கொடுப்பதில்லை எனவும், இந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது. கடந்த 2003-ம் ஆண்டு விதிக்கப்பட்ட டாஸ்மாக் விதிகளின்படி, அரசு நிர்ணயித்த விலையில் தான் மதுபானங்களை விற்க வேண்டும் எனவும், மதுபானங்களின் விலை பட்டியலை ஒட்ட உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சத்திய நாராயணன் மற்றும் அனிதா சுமந்த் அடங்கிய அமர்வு, மதுபானங்கள் கொள்முதல் செய்யும் போது தரமானதாக இருக்கிறதா என்று அரசு சரிபார்த்து கொள்முதல் செய்கிறதா? என கேள்வி எழுப்பினர். இதுவரை கொள்முதல் செய்தது எப்படி என்பது குறித்து விளக்கம் அளிக்க டாஸ்மாக் நிர்வாகத்திற்கு உத்தரவிட்ட நீதிபதிகள், அரசு நிர்ணயித்த விலையில்தான் மதுபானங்கள் விற்கப்படுகிறதா எனவும் கேள்வி எழுப்பினர்.
அதிக விலைக்கு விற்பவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடர்பாக ஜூன்-25 ம் தேதி அறிக்கை அளிக்க வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தனர்.