புதுச்சேரியில் மரவள்ளி கிழங்கு செடிகளை நாசமாக்கும் காட்டுப்பன்றிகள் : வேளாண்துறை, வனத்துறை நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை
May 31 2020 3:39PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புதுச்சேரி கிராமப்பகுதிகளில் மரவள்ளி கிழங்கு செடிகளை நாசமாக்கும் காட்டுப்பன்றிகளை ஒடுக்க வேளாண் துறையும், வனத்துறையும் இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புதுச்சேரி மண்ணாடிபட்டு தொகுதிக்கு உட்பட்ட சோம்பட்டு, மண்ணாடிபட்டு, கூனிச்சம்பட்டு, திருக்கனூர், வம்புபட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் மரவள்ளி, கரும்பு, நெல், நிலக்கடலை உள்ளிட்ட பயிர்கள் பயிரிடப்பட்டுள்ளன. திருக்கனூர், மண்ணாடிப்பட்டு, சோம்பட்டு, வாதானூர் உள்ளிட்ட கிராமங்களில் இரவு நேரங்களில் காட்டுப்பன்றிகள் புகுந்து மரவள்ளி கிழங்கு செடிகளை நாசமாக்கி வருகின்றன. கிழங்கை மட்டுமே சாப்பிட்டு விட்டு செடிகளை விட்டு செல்கின்றன. இதனால் விவசாயிகளுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வேளாண் துறையும், வனத்துறையும் இணைந்து காட்டுப்பன்றிகளை ஒடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, காட்டுப்பன்றிகளால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.