விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கண்மாயில் மருத்துவ கழிவுகள் கொட்டப்பட்டு குப்பை மேடாகும் அவலம் - குடிமராமத்து பணிகளை விரைந்து மேற்கொள்ள விவசாயிகள் கோரிக்கை
Jun 3 2020 2:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரை மாவட்டம் செல்லம்பட்டி பகுதியில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் கண்மாய் மருத்துவ கழிவுகள் கொட்டப்படும் குப்பை மேடாக மாறிவருகிறது. இதனை தூர்வாரும் வகையில் குடிமராமத்து பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செல்லம்பட்டி அருகே உள்ள புள்ளநேரி ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய கண்மாய் சுமார் 300 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதன் மூலம் 14 கிராமங்களின் குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுவதோடு, 450 ஏக்கர் பாசனத்திற்கும் பயன்படுகிறது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கண்மாய் என்றபோதிலும், அதில் அண்மைக்காலமாக மருத்துவக்கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுவதால் அது குப்பைமேடாக மாறிவருகிறது. எனவே கண்மாயை சீரமைக்கும் வகையில் குடிமராமத்து திட்டத்தின் கீழ் அங்கு தூர்வாறும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இல்லையென்றால் போராட்டக் களத்தில் இறங்கப்போவதாகவும் எச்சரித்துள்ளனர்.