நாகையில் கந்துவட்டி கொடுமைக்கு ஆளான பெட்ரோல் பங்க் ஊழியர்கள் - விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாபம்
Jun 4 2020 2:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாகப்பட்டினம் மாவட்டத்தில், கந்து வட்டி கொடுமையால் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் இருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி தாலுகாவைச் சேர்ந்த ஆனந்தன், இவரது நண்பர் முருகேசன் ஆகியோர், நாகை அருகே, திருமருகல் யூனியன் அலுவலகம் செல்லும் சாலையில் உள்ள இந்தியன் ஆயில் பெட்ரோல் பங்க்கில், 10 ஆண்டுகளாக, வரவு செலவு கணக்குகளை பார்க்கும் வேலை செய்து வந்தனர். இந்நிலையில், வரவு செலவு கணக்கில், 8 லட்சம் ரூபாய் மாயமானதாகத் தெரிகிறது. இது குறித்து அறிந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் திரு. கலியபெருமாள், மாயமான தொகையை செலுத்தும்படி, ஆனந்தன், முருகேசன் ஆகியோரிடம் வற்புறுத்தி எழுதி வாங்கியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, இருவரும் திருமருகல் பகுதியைச் சேர்ந்த கந்துவட்டி கும்பலிடம் வட்டிக்கு பணம் வாங்கி சமாளித்து வந்தனர்.
இந்நிலையில், அண்மையில் சொந்த ஊருக்கு சென்ற ஆனந்தன், விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்த தகவலறிந்த பெட்ரோல் பங்க் உரிமையாளர் திரு. கலியபெருமாள், திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு, மற்றொரு ஊழியர் முருகேசனை அழைத்து வந்து, முழு தொகையையும் செலுத்தும்படி மிரட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த முருகேசன், பெட்ரோல் பங்க்கில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.