மதுரை சித்த மருத்துவரின் மருந்தை கொரோனாவுக்கு பரிசோதிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு - சாதாரண மனிதனும் பயன்படுத்தும் வகையில் சித்த மருந்துகளை ஆய்வு செய்து விவரங்களை அரசிதழில் வெளியிடவும் அறிவுறுத்தல்
Jul 7 2020 12:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சித்த மருத்துவத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ எனும் மருத்துவப் பொடியை மத்திய அமைச்சகம் பரிசோதித்து, அது குறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3-ம் தேதி தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த சித்த மருத்துவர் திரு.சுப்ரமணியன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல மனு தாக்கல் செய்தார். அதில், 66 மருத்துவப் பொருட்களைக் கொண்டு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மருத்துவப் பொடியை தயாரித்துள்ளதாகவும்,
இது உடலுக்கு எவ்விதமான எதிர்மறை விளைவுகளையும் ஏற்படுத்தாது என்றும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கும் மின்னஞ்சல் மற்றும் தொலைபேசி மூலமாக தெரிவித்த நிலையில் இதுவரை எவ்வித பதிலும் இல்லை - எனவே, சித்த மருத்துவத்தின் அடிப்படையில் கொரோனோவிற்காக தயாரிக்கப்பட்டிருக்கும் இம்ப்ரோ மருத்துவப் பொடியை பரிசோதித்து முடிவுகளைத் தெரிவிக்க ஆயுஷ் அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். மனுவை விசாரித்த நீதிபதிகள், இதுகுறித்து மத்திய ஆயுஷ் அமைச்சகம் பரிசோதித்து, அதுகுறித்த அறிக்கையை ஆகஸ்ட் 3ஆம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும், இந்திய மருத்துவம் தொடர்பான மருந்துகளை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்கப்படவில்லை என தெரியவருவதாக குறிப்பிட்ட நீதிபதிகள், இந்திய மருத்துவமுறையை பரிசோதிக்க போதுமான நிதி ஒதுக்குவது குறித்தும், மருந்துகளை ஆய்வு செய்து அது தொடர்பான விவரங்களை அரசிதழில் வெளியிட்டு, சாதாரண மனிதரும் பயன்படுத்தும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.