சித்த மருத்துவர்கள் யாரேனும், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக தெரிவித்தால், அதனை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டிய அரசு, சந்தேக பார்வையை விரிப்பது ஏன்? என தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சித்த மருத்துவர் தணிகாசலம் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதை எதிர்த்து, அவரது தந்தை கலியபெருமாள், சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு, நீதிபதிகள் கிருபாகரன், வி.எம் வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தணிகாசலத்தை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்ததற்கான காரணம் என்ன என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், கொரோனா தொற்றுக்கு மருந்து உள்ளது என அவர் தெரிவிக்கும் போது, அதை பரிசோதிப்பதை விடுத்து, ஏன் அவரை கைது செய்யவேண்டுமென கேள்வி எழுப்பினர். 60 ஆண்டுகளாக சித்த மருத்துவராக உள்ள டாக்டர் சுப்பிரமணியன் என்பவர், கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்ததாக ஆரம்பத்திலேயே தமிழக அரசிடம் தெரிவித்தும், அது புறக்கணிக்கப்பட்ட நிலையில், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதன் பேரில், தற்போது அந்த மருந்து மத்திய ஆயுஷ் அமைச்சகத்தின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக நீதிபதிகள் குறிப்பிட்டனர். ஆரம்பத்திலேயே அவரது மருந்தை அரசு பரிசீலனை செய்திருந்தால், மருந்து இந்நேரத்திற்கு வெளி வந்திருக்கும் என தெரிவித்த நீதிபதிகள், மத்திய - மாநில அரசுகள் சித்த மருத்துவத்தின் மீது பாகுபாடு காட்டுவதாகவும் தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து மத்திய, மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.
கொரோனா தொற்றுக்கு மருந்து கண்டறிந்துள்ளதாக இதுவரை எத்தனை சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்?
அதனை பரிசோதித்ததில் எத்தனை மருந்துகளில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதாக தெரியவந்துள்ளது? அவற்றில் எத்தனை மத்திய ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது?
தமிழகத்தில் சித்த மருத்துவ ஆராய்ச்சிக்காக இதுவரை எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது?
தமிழகத்தில் எத்தனை சித்த மருத்துவ ஆராய்ச்சி ஆய்வகங்கள் உள்ளன? அவற்றில் போதுமான மருத்துவ நிபுணர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனரா?
மத்திய ஆயுஷ் அமைச்சகம் ஆயுர்வேதம், யுனானி ஹோமியோபதி, சித்தா துறை வளர்ச்சிக்காக கடந்த 5 ஆண்டுகளில் எவ்வளவு செலவிட்டுள்ளது?
உள்பட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், மத்திய ஆயுஷ் அமைச்சகத்தை வழக்கில் தானாக முன்வந்து இணைத்தனர். மேலும், நீதிமன்றம் எழுப்பியுள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க மத்திய, மாநில, அரசுகளுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 23-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.