சாத்தான்குளம் இரட்டைக் கொலை வழக்கு - நாளைமுதல் விசாரணையை தொடங்குகிறது சி.பி.ஐ
Jul 9 2020 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் இரட்டைக்கொலை வழக்கில், நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் சி.பி.ஐ. தகவல் தெரிவித்துள்ளது.
சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் சத்யநாராயணன், ராஜ மாணிக்கம் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் 10 பேரை கைது செய்துள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சி.பி.ஐ. தரப்பில் இவ்விவகாரம் தொடர்பாக கடந்த 7-ம் தேதி 2 வழக்குகள் பதிவு செய்யபட்டிருப்பதாகவும், நாளை முதல் விசாரணையை தொடங்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள், சிபிசிஐடி தரப்பில் வழக்கின் தற்போதைய நிலை அறிக்கையை சீலிட்ட கவரில் தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். இந்த அறிக்கையில், சாத்தான்குளம் காவல் நிலையம், மருத்துவமனை மற்றும் கோவில்பட்டி கிளைச் சிறையில் என்ன நடந்தது என்பதன் முழு விவரங்களும் இருக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். சி.பி.ஐ., சிபிசிஐடி இருவரையும் இவ்வழக்கில் எதிர்மனு தாரர்களாக சேர்த்த நீதிபதிகள், சிபிஐயோ, சிபிசிஐடியோ, தாங்கள் கைது செய்தவர்களை, அவர்கள் கைது செய்யப்பட்டது முதல் 15 நாட்கள் முடிவதற்குள்ளாக, உடனடியாக காவலில் எடுத்து விசாரிப்பது தொடர்பாக நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்வது உள்ளிட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.