சாத்தான்குளம் வழக்கு - பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை
Jul 9 2020 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம் சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.
தந்தை, மகன் கொலை வழக்கில் விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி, சாத்தான்குளம் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர்கள் உட்பட 5 பேரை ஏற்கெனவே கைது செய்தனர். அவர்கள் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை, காவலர்கள் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை, தாமஸ் பிரான்சிஸ் ஆகிய மேலும் 5 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற இந்த விசாரணைக்கு பிறகு 5 காவலர்களும் கைது செய்யப்பட்டனர். அவர்களில் செல்லத்துரை, வெயில்முத்து, சாமத்துரை ஆகியோர் தூத்துக்குடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறைக்காவலில் அடைக்கப்பட்டனர்.
முன்னதாக இவ்வழக்கில் கைதாகியிருக்கும் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வர இருந்த நிலையில், மனுதாரர்கள் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில்,
இவ்வழக்கின் விசாரணையை வரும் 13-ம் தேதிக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இதனிடையே, தூத்துக்குடியில் உள்ள சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் பெண் காவலர் ரேவதி மற்றும் பென்னிக்சின் நண்பர்கள் 5 பேரிடம், சி.பி.சி.ஐ.டி போலீசார் விசாரணை நடத்தினர்.