தமிழகத்தில் ஒரே நாளில் 4,231 பேருக்கு கொரோனா பாதிப்பு - மேலும் 65 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Jul 10 2020 12:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் 3 நாட்களுக்குப் பிறகு நேற்று மீண்டும் கொரோனா பாதிப்பு 4 ஆயிரத்தைக் கடந்துள்ளது. ஒரேநாளில் 65 பேர் பலியானதையடுத்து, தொற்றால் உயிரிழந்தோர் எண்ணிக்கை ஆயிரத்து 765-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரேநாளில் 4 ஆயிரத்து 231 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 581 ஆக உயர்ந்தது. சென்னையில் மட்டும் ஆயிரத்து 216 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 73 ஆயிரத்து 728-ஆக உயர்ந்தது. தமிழகத்தில் நேற்று மட்டும் 65 பேர் பலியானதை தொடர்ந்து, கொரோனா பலி எண்ணிக்கை ஆயிரத்து 765 ஆக உயர்ந்தது. தமிழகத்தில் ஒரேநாளில் 3 ஆயிரத்து 994 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர். இதுவரை 78 ஆயிரத்து 161 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தமிழக சுகாதாரத்துறை அளித்த தகவலின்படி, நேற்று அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. திருவள்ளூர் - 364, விருதுநகர் - 289, மதுரை - 262, கள்ளக்குறிச்சி - 254, தூத்துக்குடி - 196, செங்கல்பட்டு - 169, திருநெல்வேலி - 110, கன்னியாகுமரி - 93, கோவை - 98, சேலம் - 92, தேனி - 90, வேலூரில் 87 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது. திருவண்ணாமலையைச் சேர்ந்த, பிறந்து 25 நாட்களேஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.