சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கு - ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ தாக்கல் செய்த மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை விசாரணை
Jul 13 2020 5:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சாத்தான்குளம் தந்தை-மகன் கொலை வழக்கில் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 பேரை 5 நாள் காவலில் விசாரிக்க சி.பி.ஐ தாக்கல் செய்த மனு மீது மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் நாளை விசாரணை நடைபெறுகிறது. அப்போது ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் ஆஜர்படுத்தபடவுள்ளனர்.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த ஜெயராஜ், அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர், காவல் விசாரணையில் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சி.பி.சி.ஐ.டி மற்றும் சி.பி.ஐ போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார், இந்த கொலை வழக்கு தொடர்பாக பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகள் மற்றும் முக்கிய சாட்சியாக உள்ள காவல் நிலைய சிசிடிவி பதிவுகள் உள்ளிட்ட ஆவணங்களை சிபிஐ கூடுதல் கண்காணிப்பாளர் விஜயகுமார் சுக்லாவிடம் வழங்கினர்.
இந்நிலையில், மதுரை மத்திய சிறையில் காவலில் உள்ள சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜா ஆகிய 5 பேரையும் 5 நாட்கள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி, சிபிஐ ஏடிஎஸ்பி விஜயகுமார் சுக்லா தலைமையில் அதிகாரிகள், மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த்குமார் முன்னிலையில் மனுதாக்கல் செய்தனர். இதனையடுத்து சிபிஐ தரப்பு மனுவானது நாளை மதியம் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படவுள்ளது. வழக்கு விசாரணையின் போது ஆய்வாளர் உள்ளிட்ட 5 பேரும் நேரில் ஆஜர்படுத்தபடவுள்ளனர். கொலை வழக்கு தொடர்பான நீதிமன்ற ஆவணங்கள் மற்றும் லத்திகள், ரத்தகறை படிந்த துணிகள் ஆகியவை மதுரை மாவட்ட குற்றவியல் தலைமை நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.