பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எரிவாயுக் குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்வதற்கு டிடிவி தினகரன் கடும் கண்டனம் - தமிழக அரசின் அறிவிப்பு காற்றோடு போனதா? என்றும் கேள்வி
Aug 12 2020 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல பகுதியில் எரிவாயு குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்வதற்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு. டிடிவி தினகரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்ற தமிழக அரசின் அறிவிப்பு, தற்போது காற்றோடு போனதா? எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என்று அறிவிக்கப்பட்ட கொள்ளிடம் பகுதியில் விவசாய நிலங்களின் வழியாக கெயில் எரிவாயு குழாய் பதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுவது கடும் கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் ஓ.என்.ஜி.சி நிறுவனம் தோண்டியுள்ள சுமார் 20 கிணறுகளில் இருந்து செம்பனார்கோவில் அருகே உள்ள மேமாத்தூருக்கு எரிவாயுவை எடுத்துச் செல்ல 2 ஆண்டுகளுக்கு முன் விளைநிலங்களின் வழியாக குழாய் பதிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். 'கெயில்' நிறுவனம் மேற்கொண்ட அந்தப் பணிக்கு விவசாயிகள், மீனவர்கள், பொதுமக்கள், சூழலியல் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் தெரிவித்த எதிர்ப்பினால் அப்போதைக்கு நிறுத்தப்பட்டதாக திரு.டிடிவி தினகரன் சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால், தற்போது கொரோனா ஊரடங்கு காலத்திலும் சீர்காழி அருகே உள்ள திருநகரியில் இருந்து பழையபாளையம் வரையிலான புதிய பாதையில் விளைநிலங்களின் வழியாக எரிவாயு குழாய் பதிக்கும் பணிகளை கெயில் நிறுவனம் மீண்டும் தொடங்கியிருப்பதாக வரும் செய்தி அதிர்ச்சியளிப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பகுதிகளையும் உள்ளடக்கிதான் கடந்த பிப்ரவரி மாதம் முதலமைச்சர் திரு. பழனிசாமி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தை அறிவித்தார் என குறிப்பிட்டுள்ள திரு.டிடிவி தினகரன், இப்போது அங்கே விளைநிலங்களை 5 அடி ஆழத்திற்குத் தோண்டி எரிவாயு குழாய்களைப் பதித்தால் அது எப்படி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாகும்? என கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கெல்லாம் ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே 'பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்திற்கான விதிமுறைகள் இன்னும் வகுக்கப்படவில்லை' என்று தமிழக அரசு கடந்த வாரம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறதோ? என்ற சந்தேகம் மக்களிடம் ஏற்பட்டிருப்பதாக திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
முதலமைச்சர் திரு.பழனிசாமி, வேளாண் மண்டலத்திற்கான அரைகுறை அறிவிப்பை வெளியிட்ட போதே நாம் எழுப்பிய குற்றச்சாட்டுகளை நிரூபிக்கும் வகையில்தான் தற்போதைய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். வெற்று வேளாண் மண்டல அறிவிப்புக்காக பட்டம் சூட்டிக்கொண்ட முதலமைச்சர் திரு.பழனிசாமிக்கு, உண்மையிலேயே விவசாயிகள் மீது அக்கறை இருக்குமானால் விளைநிலங்களையும், விவசாயத்தையும் பாதிக்கும் எரிவாயு குழாய் பதிக்கும் திட்டத்தை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும் என திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்பட்ட பகுதிகளில் விளைநிலங்கள் பாதிப்புக்குள்ளாவதையும், ஆறுகளில் இருந்து மணல் சுரண்டப்படுவதையும் தடுப்பதற்கான விதிமுறைகளை உடனடியாக வகுக்க வேண்டும் எனவும் திரு.டிடிவி தினகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.