தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Aug 12 2020 3:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை, நீலகிரி உட்பட 12 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும் எனவும், சென்னை, திருவள்ளூர், வேலூர், சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் - நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 11 சென்டிமீட்டரும், கோவை மாவட்டம் வால்பாறையில் 9 சென்மீட்டரும் மழை பதிவாகியுள்ளது. மத்திய மேற்கு வங்கக்கடல், ஆந்திர கடலோரப் பகுதிகள், மத்திய கிழக்கு மற்றும் வடகிழக்கு அரபிக்கடல், மகாராஷ்ட்ரா, கோவா, தெற்கு குஜராத் கடலோர பகுதிகளில் வரும் 16ம் தேதி வரை பலத்த காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.