பின்னணி பாடகர் திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மறைவுக்கு, அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பாடும் நிலா என்று அழைக்கப்படும், எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறப்பால், இந்திய திரையுலகம், அதன் மெல்லிசை குரல்களில் ஒன்றை இழந்துவிட்டதாக, குடியரசுத்தலைவர் திரு.ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி. பாலசுப்பிரமணியத்தின் இறப்பு, இசை உலகத்துக்கு பேரிழப்பு என பிரதமர் திரு.நரேந்திர மோதி தெரிவித்துள்ளார். அவரது குரலாலும், இசையாலும், பல ஆண்டுகளாக ரசிகர்களை கவர்ந்தவர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
திரையுலகில் நிரப்ப முடியாத வெற்றிடத்தை, எஸ்.பி. பாலசுப்பிரமணியம் ஏற்படுத்திவிட்டு சென்றதாக, குடியரசு துணைத்தலைவர் திரு.வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
மெல்லிசைக்குரல் மூலமாகவும், இசை மூலமாகவும் நமது நினைவுகளில் எஸ்.பி. பாலசுப்பிரமணியம், எப்போதும் நிறைந்திருப்பார் என உள்துறை அமைச்சர் திரு.அமித்ஷா தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் குரல் மேலும் பல தலைமுறைகளுக்கு நினைவுகூறப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் செல்வி மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பியின் பாடல்கள் பல மொழிகளில், பல்லாயிரக்கணக்கான இதயங்களை கவர்ந்தது என காங்கிரஸ் எம்.பி திரு.ராகுல்காந்தி தெரிவித்துள்ளார். அவரது குரல் எப்போதும் ஒலித்துக்கொண்டிருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி ஒப்பற்ற திறமை கொண்டவர் என்றும், எல்லைகளைக் கடந்து இசையுலகில் சாதனை படைத்தவர் என்றும் கேரள முதலமைச்சர் திரு.பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். எஸ்.பி.பி மரணம் இந்திய கலாச்சார உலகிற்கு பெரும் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார்.
இசை ரசிகர்களின் இதயங்களில் எஸ்.பி.பி உறுதியான இடத்தைப் பெற்றுள்ளார் என ஆந்திர முதலமைச்சர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி தெரிவித்துள்ளார்.
எஸ்.பி.பி அவரது பாடல்கள் மூலமாக எப்போதும் நம்முடன் வாழ்ந்து கொண்டிருப்பார் என காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.சித்தராமையா தெரிவித்துள்ளார்.