திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்திற்கு சென்ற நடிகை குஷ்பு கைது - மாமல்லபுரம் அருகே காரை தடுத்து நிறுத்தி காவல்துறை நடவடிக்கை
Oct 27 2020 11:46AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்க சென்றபோது நடிகை குஷ்புவை மாமல்லபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
பெண்கள் குறித்து திரு.திருமாவளவன் பேசியது தொடர்பான சர்ச்சையில் பா.ஜ.க.வினர் அவருக்கு எதிராக போராட்டம் அறிவித்தனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் இந்த போராட்டம் நடைபெறும் என்றும், அதில் அக்கட்சியில் அண்மையில் சேர்ந்த நடிகை குஷ்பு பங்கேற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு போட்டியாக விடுதலை சிறுத்தைகள் கட்சியும் அங்கு ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அறிவித்தது. இதனால் இவ்விரு கட்சிகளுக்கும் காவல்துறை அனுமதி மறுத்தது.
இந்த நிலையில், தடையை மீறி போராட்டத்தில் பங்கேற்பதற்காக நடிகை குஷ்பு சென்னையிலிருந்து இன்று காலை சிதம்பரம் புறப்பட்டார். முட்டுக்காடு பகுதியில் அவர் காரில் சென்றபோது மாமல்லபுரம் ஏ.எஸ்.பி. திரு.சுந்தரவதனம் தலைமையிலான போலீசார் அவரது காரை தடுத்து நிறுத்தி குஷ்புவை கைது செய்தனர். இதேபோல் பா.ஜ.க.வை சேர்ந்த பிற நிர்வாகிகளும் பல்வேறு இடங்களில் கைதாகினர்.
இதனிடையே, போராட்டம் அறிவிக்கப்பட்டிருக்கும் சிதம்பரம் நகரில் பதற்றம் நிலவுவதால் அங்கு போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். தடையை மீறி அங்கு போராட வந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பா.ஜ.க.வினரை காவல்துறையினர் கைது செய்தனர்.