மனைவியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிக்கும் கணவர் - மணிமண்டபம் கட்டி நாள்தோறும் பூஜை
Oct 31 2020 1:15PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி அருகே, காலமான மனைவியின் நினைவாக அவருக்கு மணிமண்டபம் எழுப்பி, தினமும் வணங்கி வரும் முன்னாள் ராணுவ வீரரின் பாசப்பிணைப்பு, அப்பகுதி மக்களை நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது.
கால ஓட்டத்தில், இறப்பு என்பது சாதாரண நிகழ்வாக மாறி வரும் சூழலில், தூத்துக்குடி மாவட்டம் முடிவைத்தானேந்தலை சேர்ந்த மாடசாமி, ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று, தனது மனைவி வள்ளியம்மையுடன் வசித்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு நோய்வாய்ப்பட்டு வள்ளியம்மை காலமான நிலையில், அவரது இழப்பால் வேதனையின் விளிம்புக்கு தள்ளப்பட்டார் மாடசாமி. காதல் மனைவி மும்தாஜுக்காக தாஜ்மஹாலை கட்டிய ஷாஜகானாய் மாறிய மாடசாமி, தனது வீட்டின் முன்பு 8 லட்சம் ரூபாய் செலவில் மணிமண்டபம் கட்டி, மனைவிக்கு கற்சிலை அமைத்தார். தினந்தோறும் காலையில் தனது மனைவியின் சிலைக்கு பூஜை செய்யும் மாடசாமி அதன்பின்பே மற்ற பணிகளை மேற்கொள்கிறார்.