நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்கம் அளிக்க டிடிவி தினகரன் வலியுறுத்தல் - இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் எச்சரிக்கை
Oct 31 2020 4:54PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானம் இடிந்து விழுந்தது குறித்து பழனிசாமி அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார். இத்தகைய தவறுகளுக்கு ஆட்சியாளர்கள் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி கட்டுமானப் பணிகளின்போதே புதிதாக கட்டப்பட்ட தூண் உள்ளிட்டவை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டதாகவும், அதில் 5 தொழிலாளர்கள் காயமடைந்ததாகவும் வரும் செய்திகள் அதிர்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், அந்த மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் விபத்து நடைபெறவில்லையென்றும், அதிகாரிகள்தான் அதனை இடித்து தள்ளினார்கள் என்றும் கூறியிருக்கிறார் - அப்படியானால் விபத்து நடந்ததாக தகவல் வெளியானதும், மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் அவசர, அவசரமாக அங்கு சென்று பார்வையிட்டதும் ஏன்? என்றும் திரு. டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தரமற்ற பொருட்களைப் பயன்படுத்தி பணிகள் மேற்கொள்ளப்படுவதால் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரியில் புதிய கட்டுமானம் இடிந்து விழுந்ததா? இல்லை, திட்டமிடாமல் பணிகளை செய்ததால் இடித்து தள்ளப்பட்டதா? என்ற மக்களின் சந்தேகங்களுக்கு பழனிசாமி அரசு உரிய விளக்கமளிக்க வேண்டும் திரு. டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
மக்களின் வரிப்பணத்தில் செய்யப்படும் கட்டுமானத்தில் நிகழும் இத்தகைய தவறுகளுக்கு மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும் என்பதை ஆட்சியாளர்கள் மறந்துவிடக்கூடாது என்றும் கழகப் பொதுச்செயலாளர் திரு. டிடிவி தினகரன் எச்சரித்துள்ளார்.