இடஒதுக்கீடு போராட்டத்திற்காக திரண்ட பா.ம.க.வினர், மறியலை தொடர்ந்து ரயில்கள் மீது கல்வீச்சு - புறநகர் மற்றும் வெளியூர்களிலிருந்து சென்னை நோக்கி வரும் ரயில்கள் ரத்து
Dec 1 2020 1:22PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இட ஒதுக்கீடு தொடர்பான ஆர்ப்பாட்டத்துக்காக சென்னை நோக்கி வந்த பா.ம.க.-வினர் பல இடங்களில் சாலை தடுப்புகளை சேதப்படுத்தி வன்முறையில் ஈடுபட்டனர். சென்னை நோக்கி வரும் ரயில்கள் மீதும் கல்வீசி தாக்கி வன்முறையில் ஈடுபட்டதால் ஆங்காங்கே ரயில்கள் நிறுத்தப்பட்டன.
இடஒதுக்கீடு கேட்டு பா.ம.க.வினர் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டத்திற்கு திட்டமிட்டிருந்தனர். இதற்காக பல இடங்களிலிருந்து சென்னை வந்த அவர்கள், ஆங்காங்கே சாலை மறியல் செய்து தடுப்புகளை சேதப்படுத்தினர். தாம்பரம் இரும்புலியூர் பகுதியில் ஒன்றுதிரண்ட அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால், பா.ம.க.வினர் ஆத்திரமடைந்தனர். அங்கு திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை தடுப்புகள் மற்றும் அங்கிருந்த பொருட்களையும் அடித்து சேதப்படுத்தினர். இதனால் ஒரு மணி நேரமாக கடும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திடீரென தாம்பரம் ரயில் நிலையத்திற்கு சென்று அங்கும் திடீர் மறியலில் ஈடுபட்டதால் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் போலீசாருக்கும், பா.ம.க.வினருக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானதால், அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர். இதேபோல் மேலும் சில பகுதிகளிலும் பா.ம.க.வினரின் மறியலால் பொதுமக்கள் அவதிக்கு ஆளானார்கள். மறியலை தொடர்ந்து அவர்கள் பல இடங்களில் ரயில்கள் மீது கற்களை வீசி வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் தாம்பரத்திலிருந்து சென்னை நோக்கி புறநகர் ரயில்கள் மற்றும் வெளியூரிலிருந்து வரும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.