மத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் : சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Dec 1 2020 3:55PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது மாநில மொழிகளிலும் வெளியிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டப் பகுதியில் உள்ள, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சூழல் உணர்திறன் மண்டலமாக அறிவிக்கப்பட்டது.
அதன் எல்லை நிர்ணயம் தொடர்பாக பொது மக்களிடம் முறையாக கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்படாமல், கொரோனா நோய்த்தொற்று இருந்த காலங்களில், கருத்து கேட்பதற்காக அறிவிப்பு வெளியிடப்பட்டது. இருப்பினும் செய்தித்தாள்களில் அவை விளம்பரப்படுத்தப் படவில்லை. பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிப்பதற்கான வாய்ப்பை அளிக்காமலேயே, கடந்த செப்டம்பர் 22-ம் தேதி, சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை 0 முதல் 3 கிலோமீட்டர் வரை என நிர்ணயம் செய்து மத்திய அரசு அரசாணை வெளியிட்டது. இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பொதுமக்களிடம் முறையாக கருத்துக் கேட்பு நடத்தாமல், குமரி மாவட்ட சூழல் உணர்திறன் மண்டலத்தின் எல்லையை நிர்ணயம் செய்த மத்திய அரசின் அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனர். மத்திய அரசு தங்களின் அறிவிப்புகளை வெளியிடும் போது இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமல்லாது, அப்பகுதி மக்களின் மொழியிலும் வெளியிட வேண்டும் என தெரிவித்ததோடு, இதுதொடர்பாக மத்திய மாநில அரசுகள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை வரும் 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.