டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு : தமிழகம் முழுவதும் விவசாய அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டம்
Dec 2 2020 3:01PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும், இந்த சட்டங்களை எதிர்த்து டெல்லியில் போராடிவரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும், விவசாய சங்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில், தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
திண்டுக்கல், நாகல் நகர் பகுதியில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக, 3-ம் நாளாக இன்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் செல்வி.பாலபாரதி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பிரதமர் மோதியின் உருவபொம்மையை எரித்து எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகில், அனைத்துக் கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாது நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக்கோரி நாகையில், தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில், 3-வது நாளாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், ஏராளமான விவசாயிகள் கொட்டும் மழையிலும், குடை பிடித்தவாறு, பங்கேற்றனர்.