டெல்லியில் விவசாயிகளின் போராட்டத்திற்கு பெருகும் ஆதரவு : தமிழகத்தில் பல்வேறு கட்சியினர், விவசாய சங்கங்கள் ஆர்ப்பாட்டம்
Dec 2 2020 3:44PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தில் பல்வேறு கட்சியினரும், விவசாய அமைப்புகளும் போராட்டத்தில் ஈடுபட்டுவருவதுடன், டெல்லியில் விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவும் அளித்துவருகின்றனர்.
டெல்லியில், போராட்டம் நடத்திவரும் விவசாயிகள் மீதான அடக்குமுறையை கண்டித்து சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள தலைமை தபால் நிலையம் முன்பு அகில இந்திய விவசாய போராட்ட ஒருங்கிணைப்பு குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, மத்தியஅரசு புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப் பாசன விவசாயிகள் சங்கத்தினர் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். டெல்லியில் போராடிவரும் விவசாயிகள் மீது பதியப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளை போலீசார் கைது செய்தனர்.
டெல்லி விவசாயிகள் நடத்திவரும் போராட்டத்திற்கு ஆதரவாக திருச்சி உறையூரில் அகில இந்திய விவசாய சங்க போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய பாரதிய ஜனதா அரசு, விவசாயிகளின் கோரிக்கைக்கு செவிசாய்க்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் எச்சரித்தனர்.
புதிய வேளாண் சட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி, அனைத்து கட்சி சார்பில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை வண்ணாரப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகளும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்.
இதேகோரிக்கையை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ராம்நகர், அண்ணா சிலை அருகில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், மாணவர் பெருமன்றம் மற்றும் இளைஞர் பெருமன்றம் ஆகிய அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு மத்திய அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.
புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து சேலம் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆத்தூரில் ஏர் கலப்பை பேரணி நடைபெற்றது. உடையார்பாளையம் காந்தி சிலையில் தொடங்கிய இந்த பேரணியை ரவுண்டானா சிக்னல் அருகே போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.