தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ளது புரெவி புயல் - தென்தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை
Dec 2 2020 8:09PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல் காரணமாக, தென்தமிழகத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள புரெவி புயல், மேற்கு வடமேற்கு நோக்கி நகர்ந்து வருவதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இலங்கையின் திரிகோணமலைக்கு 140 கிலோமீட்டர் தொலைவிலும், பாம்பனுக்கு தென்கிழக்கே 370 கிலோமீட்டர் தொலைவிலும், கன்னியாகுமரிக்கு வடகிழக்கே 550 கிலோமீட்டர் தொலைவிலும் புயல் மையம் கொண்டுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து, இலங்கையின் திரிகோணமலையில் இன்று இரவு கரையைக் கடக்கும் என்றும், அப்போது மணிக்கு 80 முதல் 90 கிலோமீட்டர் வேகத்திலும், அதிகபட்சமாக 100 கிலோமீட்டர் வேகத்திலும் சூறாவளிக்காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது. இதைத்தொடர்ந்து, மன்னார் வளைகுடா வழியாக புயல் நகர்ந்து, நாளை இரவு பாம்பன் - கன்னியாகுமரி இடையே புயல் கரையைக் கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தென்தமிழக கடலோரப் பகுதிகளில் புயலின் தாக்கம் அதிகம் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.