மாண்புமிகு அம்மாவின் வழியில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடும் விதமாக, கழகத்தின் சார்பு அணிகளில் தனியாக மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு உருவாக்கம் - டிடிவி தினகரன் அறிவிப்பு
Dec 3 2020 11:23AM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
புரட்சித்தலைவி அம்மாவின் வழியில் மாற்றுத்திறனாளிகளைக் கொண்டாடுவோம் என அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார். மாற்றுத்திறனாளிகளுக்கு எனத் தனியாக கழக சார்பு அணி உருவாக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அ.ம.மு.க பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், கடவுளின் குழந்தைகளான மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
விதிக்கப்பட்ட வாழ்க்கையை விடாமுயற்சிகளால் வெற்றியாக மாற்றும் மாற்றுத்திறனாளிகள், ஒட்டுமொத்த உலகமும் திரும்பிப்பார்க்கும் வகையில் செய்த சாதனைகள் ஏராளம் என தெரிவித்துள்ளார். புவியீர்ப்பு விசையைக் கண்டறிந்த ஆல்பர்ட் ஐன்ஸ்டீன், தொலைபேசியைக் கொண்டுவந்த அலெக்சாண்டர் கிரஹாம் பெல், திரைப்படம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகளை நிகழ்த்திய தாமஸ் ஆல்வா எடிசன் என புதிய வரலாறு படைத்த மாற்றுத்திறனாளிகளின் பட்டியல் நீளமானது என திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
இத்தகைய திறமைசாலிகள் நம்மிடமும் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களை ஆண்டில் ஒரு நாள் மட்டும் கொண்டாடினால் போதாது - மாற்றுத்திறனாளிகளைப் பற்றிய சமூகத்தின் பார்வையை மொத்தமாக மாற்றி, சாதனைச்சிகரங்களைத் தொடுவதற்கான வாய்ப்புகளை அவர்களுக்கு எல்லாத் துறைகளிலும் உருவாக்கித் தருவது அவசியமாகும் - மாற்றுத்திறனாளிகளின் வாழ்வியல் சூழலுக்கும் உகந்த வகையில் நம்முடைய சமூக கட்டமைப்பை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயம் - அரசியல் அதிகாரத்திலும் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பு இருக்கும் போதுதான் அத்தகைய மாற்றங்கள் காலப்போக்கில் சாத்தியமாகும் என திரு.டிடிவி தினகரன் குறிப்பிட்டுள்ளார்.
வாழ்நாள் முழுவதும் மாற்றுத்திறனாளிகளை நேசித்துக் கொண்டாடிய நம்முடைய இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மாவின் திருப்பெயரைத் தாங்கியிருக்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், அதற்கான முன்னெடுப்பைச் செய்வதில் பெருமிதம் கொள்கிறது என கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் பெருமிதத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
மாற்றுத்திறனாளிகளுக்கான அரசியல் அங்கீகாரமாக, அவர்களுக்கென்று கழகத்தின் சார்பு அணிகளில் தனியாக "மாற்றுத்திறனாளிகள் நலப்பிரிவு" உருவாக்கப்படுவதாகவும், இதற்கான நிர்வாகிகள் விரைவில் அறிவிக்கப்படுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்காலத்தில் சமூக, அரசியல் களத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு புது எழுச்சி தரப்போகும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த அறிவிப்பினை சிறப்புக்குரிய இந்த நாளில் வெளியிடுவதில் பெரும் மகிழ்ச்சியடைவதாக திரு.டிடிவி தினகரன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.