இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்குகளில் தமிழ் கட்டாயம் இடம்பெற வேண்டும் - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
Dec 3 2020 6:41PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களில் இனிவரும் காலங்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் பொழுது கண்டிப்பாக தமிழ் மொழியும் இடம் பெற வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை தெரிவித்துள்ளது.
கரூரில் உள்ள கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் குடமுழுக்கு விழாவில், தமிழ் சைவ ஆகம விதிகளின்படி தேவாரம், திருவாசகம், போன்றவைகள் வாசிக்கப்பட்டு குடமுழுக்கு விழாவை நடத்த உத்தரவிட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் திரு.கிருபாகரன், திரு.புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, குடமுழுக்கு விழாவிற்காக 25 ஓதுவார்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழ் வழியிலும் குடமுழுக்கு நடத்தப்படும் எனவும் கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தமிழிலும் குடமுழுக்கு நடைபெறும் என்றால், அழைப்பிதழில் ஏன் ஓதுவார்களின் பெயர் இடம்பெறவில்லை என கேள்வி எழுப்பிய நீதிபதிகள், இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட கோவில்களின் குடமுழுக்கு விழா, கண்டிப்பாக தமிழிலும் நடத்தப்பட வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதம் உள்ளிட்ட பிற மொழிகளில் குடமுழுக்கு நடத்துவது குறித்து எந்த மாற்றுக்கருத்தும் இல்லை எனத் தெரிவித்த நீதிபதிகள், இதே கோரிக்கையை வலியுறுத்தி மீண்டும் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானால், கோவில் நிர்வாகத்திற்கு 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.