சிறையிலிருந்து விடுதலை செய்யக்கோரி பேரறிவாளன் தொடர்ந்த வழக்கு - உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை
Jan 19 2021 3:07PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
சிறையில் உள்ள தன்னை விடுதலை செய்யக்கோரி உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நாளை இறுதி விசாரணை நடைபெறுகிறது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி வழக்கில் சிறையில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன், உச்சநீதிமன்றமே சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவிக்கக் கோரி கடந்த நவம்பரில் மனு தாக்கல் செய்தார். விசாரணையின்போது, அரசியல் சட்ட பிரிவு 161-ன் படி பேரறிவாளன் விடுதலை பற்றி, மாநில அரசே முடிவு செய்யலாம் என உச்சநீதிமன்றம் கூறியது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய ஆளுநருக்கு கடந்த 2018-ம் ஆண்டே பரிந்துரைத்து விட்டதாக தமிழக அரசு தெரிவித்தது. ஆனால், பேரறிவாளன் விடுதலை குறித்து மாநில அரசோ, ஆளுநரோ முடிவு செய்ய முடியாது என மத்திய அரசு வாதம் செய்தது.
இந்நிலையில், பேரறிவாளன் தொடர்ந்த வழக்கில் நாளை இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெறுகிறது. பேரறிவாளன் விடுதலை தொடர்பாக மத்திய அரசு மேற்கொள்ளும் நிலையை, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் நிராகரிக்குமா? என கேள்வி எழுந்துள்ளது. விடுதலையை எதிர்பார்க்கும் பேரறிவாளனின் சிறைவாசம் முடிவுக்கு வருமா? என்பது இந்த வழக்கின் முடிவில் தெரிந்துவிடும்.